அன்புள்ள ஆசிரிய
நட்புக்களுக்கு ச.கிறிஸ்து ஞான வள்ளுவனின் காலை வணக்கங்கள். நான் இராமநாதபுரம் மாவட்டம்
கடலாடி வட்டம் கூராங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறேன்.
எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தின் கிழக்கு கடைசி எல்லையான வேம்பார். எங்கள்
ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இராமநாதபுரம் மாவட்ட எல்லை தொடங்கிவிடுகிறது.
நான் பதிவு செய்திருந்தது
தூத்துக்குடி மாவட்டம் என்றாலும் முதலில் பணியேற்றது காஞ்சிபுரம் மாவட்டம். "எந்த
தீமைக்குள்ளும் ஒரு நன்மையுண்டு" என்பது நம்பிக்கையூட்டுவதற்காக சொல்லும் வரியாக
இருக்கலாம். ஆனால் என் வாழ்வில் அது மிகவும் சரியாக அமைந்தது. ஆம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆசிரியர் பணி
நியமனத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த
அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர்களும் காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்
பணி நியமனம் செய்யப் பட்டனர். அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு போகிப் பண்டிகையன்று காஞ்சிபுரத்தில்
உள்ள அண்ணா பயின்ற பச்சையப்பன் மேல் நிலைப்
பள்ளியில் பணி நியமன ஆணை வழங்கப் பட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எனக்கு
மிகவும் பொருந்தியது. ஆம் பொங்கல் விடுமுறைக்குப் பின் 28.1.1999 அன்று காஞ்சிபுரம்
மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியம் கூனங்கரணை கிராமத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளியில்
பணியேற்றன்.
மாற்றுத் திறனாளி
இட ஒதுக்கீட்டில் நண்பர்களை விட 7 வருடங்களுக்கு முன்பாக பணி நியமனம் பெற்றது மிகவும்
மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும் முதல் நாள் பணியேற்கச் சென்றது அந்த மகிழ்ச்சியை போக்கி
விட்டது. போக்குவரத்து வசதியற்ற அந்த கிராமத்திற்கு எனது தந்தையாருடன் வயல் வரப்புகள்
வழியாக 5கிமீ தூரம் நடந்து சென்றது மறக்க முடியாதது. சாலை வழியாக சென்றால் 7 கிமீ தொலைவு.
மறு நாளே சைக்கிள் ஒன்று வாங்கி விட்டோம். இறைவா இப்படி ஒரு கிராமத்திலா எனக்கு வேலை
தந்தாய் என அழுது தீர்த்தேன். அனால் பின்பு பலமுறை இப்படியொரு கிராமத்தில் வேலை தந்ததற்கு
இறைவனுக்கு நன்றி கூறியுள்ளேன். கிராம மக்கள் அவ்வளவு நல்லவர்கள். ஆசிரியருக்கு மரியாதை
கொடுக்கக் கூடியவர்கள்.
"கற்றலில்
இனிமை" திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்த வேளை அது. நான் குறுவள மையத்திலும் வட்டார
வள மையத்திலும் பயிற்சியில் மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்பேன். ஒரு நாள் ஒரு பயிற்சியில்
கருத்தாளர் வர தாமதமானதால் சார் நீங்கள் கொஞ்சம் நடத்துங்கள் என்றனர். நடத்தினேன்.
விளைவு அடுத்து பல பயிற்சிகளுக்கு நான் தான் கருத்தாளர். மூத்த ஆசிரியர்கள் பலரும்
என்னைத் தட்டிக் கொடுத்து வரவேற்றனர். விளைவு மாவட்ட அளவில் வினாத் தாள் தயாரிப்பு
உட்பட பல பயிற்சிகளுக்கு அனுப்பப் பட்டேன்.
நான் பணியேற்ற
போது தலைமையாசிரியராய் இருந்த திரு.தண்டபானி ஆசிரியர் அவர்கள் மிகச் சரியான ஆசிரியர்.
ஆனாலும் தலைமையாசிரியரின் பணியை தலைமையாசிரியர் தான் செய்ய வேண்டுமென்ன எண்ணம் கொண்டவர்.
அவரிடமிருந்து பல நல்ல பண்புகளை கற்றுக் கொண்டேன். சுற்றுலா போன்றவைகளை துளியும் விரும்பதவர்.
அவருக்குப் பின்னர் வந்த தலைமையாசிரியர் அவருக்கு நேர் எதிரானவர் எல்லா வகைகளிலும்.
எல்லா பொறுப்புகளையும் என்னிடம் தந்து விட்டார். நான் அப்போது அங்கு தனியாக தங்கி ஹோட்டலில்
சாப்பிட்டு வந்ததால் நேரம் தாராளமாய் இருந்தது. எனவே காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
பள்ளியே எனக்கு தஞ்சம். இதில் மாணவர்களின் பெற்றோர் மிகவும் மகிழ்ந்தனர். ஆனால் மற்ற
ஆசிரியர்கள் இதை விரும்பவில்ல. நீ இப்போ 8 மணிக்கு பள்ளிக்கூடம் போனா நீ மாறிப் போன
பின்னாடி நாங்களும் 8 மணிக்கு வர வேண்டுமென மக்கள் நினைப்பார்கள் விட்டு விடு என்றனர்.
நான் அதை காதில் போட்டுக் கொண்டதே இல்லை.
மாணவர்களை சுற்றுலா
அழைத்துச் செல்ல தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்று ஏற்பாடுகளை செய்தேன். கடைசி நேரத்தில்
அவர் சுற்றுலா வர மறுத்து விட்டார். பள்ளி சத்துணவு பொறுப்பாரோடு மாணவர்களை வெற்றிகரமாக
சுற்றிப் பார்க்க வைத்ததில் ஊராருக்கு மிகுந்த சந்தோஷம். ஏனெனில் 1961ல் பள்ளி ஆரம்பிக்கப்
பட்டாலும் அது வரை அவ்வூர் மாணவர்கள் சுற்றுலா சென்றதே இல்லை. அதனைப் போலவே காஞ்சிபுரம்
மாவட்ட அளவில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.ராஜாராமன் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்தினார்.
பள்ளிக்கான பொருட்களை ஊர் மக்களின் நிதி உதவியில் வாங்கி கண்காட்சிப் படுத்த வேண்டும்
என்றனர். விளைவு தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். அங்கூ முன்பு
பணிபுரிந்த ஆசிரியர்கள் அவ்வூர் மக்களிடம் ஒரு பைசா கூட வசூல் செய்ய முடியாது என்றனர்.
என்ன செய்வது என விழித்தேன். ஆனாலும் முயன்று பார்ப்போமே என வசூலில் இறங்கினேன். தாராளமாய்
தந்தார்கள். அப்போதே ரூ 7000 வசூலானது. அதற்கு பொருட்களை வாங்கினேன். பெரிய பள்ளிகளை
விட அதிகப் பொருட்கள் வாங்கியதற்காக கல்வி அதிகாரிகள் பாராட்டினர். அதன் பின் வந்த
தலைமையாசிரியர் திரு குப்புசாமி என்னைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கியவர்களில் முக்கியமானவர்.
மிக எளிய தோற்றம் கொண்டவர். மிகுந்த ஆங்கில அறிவு மிக்கவர். அது என் வளர்ச்சிக்கு மிகவும்
உதவியாக இருந்தது.
இப்பணி 2004 மே
வரை தொடர்ந்தது. ஜூன் மாதம் அங்கிருந்து மாறுதலாகி இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி
ஒன்றியம் எக்கக்குடி வந்தேன். மாறி வந்த பின்னர் கூனங்கரணைஹமக்கள் என்னை அழைத்து மிகப்பெரித
பாராட்டு விழா நடத்தினர். மிகப் பெரிய திருமண விழா நடந்தது விருந்துகளோடு. எனக்கு அரைப்
பவுனில் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர். தங்கம் அணிவதை விரும்பாத நான் அணிந்த
தங்க ஆபரணம் அது தான். அந்த ஊரார் ஆசிரியருக்கு நடத்திய ஒரே விழாவும் அதுதான். இதில்
தலைமையாசிரியரின் பங்கு மிக அதிகம்.
இராமநாதபுரம் மாவட்டம்
எக்கக்குடி பெரிய கிராமம். 90 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் ஊர். மிகவும் பழைவாதம்
பேசும் பலர் உள்ள ஊர். இளைய தலைமுறையினருக்கு இந்த நடைமுறை பிடிக்கவில்லை என்றாலும்
சகித்துக் கொண்டனர். 1.6.2004 அன்று 7 வது ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். நான் அங்கு
பணியேற்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு ஊரார் எங்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர் பணிபுரியக்
கூடாது என கோரிக்கை வைத்ததால் ஆண் ஆசிரியர்கள் மூவர் மாற்றப் பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்குப்
பின் பள்ளிக்குச் செல்லும் ஆண் ஆசிரியர் நான். மற்ற ஆசிரியைகள் பயங்காட்டினர். ஆனால்
தலைமையாசிரியரோ இதெல்லாம் ஒன்றுமில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இரண்டு
வருடம் வேலை பார்த்தேன் அப்பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் பயங்கதைட்டியதைப்ப் போல் எதுவும்
நடக்கவில்லை. எல்லாம் நல்லவைகளாகவே நடைபெற்றது.
ஜூன் அப்பள்ளியில்
சேர்ந்தேன் காலாண்டுத் தேர்வுக்குள் 1, 2, 3, 4, 6 என எல்லா வகுப்பிற்கும் மாற்றப்
பட்டேன். தலைமையாசிரியரைத் தவிர எல்லோருமே இடைநிலை ஆசிரியர்கள் தான். ஒருவழியாக காலாண்டுக்குப்
பின் 7 ஆம் வகுப்பாசிரியர் ஆனேன். பின் எந்த வகுப்புக்கும் மாற்றவில்லை. அந்த மாணவர்கள்
எட்டாம் வகுப்பு வந்த போது நான் எட்டாம் வகுப்பாசிரியரானேன். இது எந்த நடுநிலைப் பள்ளியிலும்
நடக்காத ஒன்று. என்னை நம்பி இந்த பொறுப்பைத் தந்த தலைமையாசிரியை திருமதி. புஷ்பவல்லி
அவர்களை என்றுமே மறக்க முடியாது. இதனிடையே ஒன்றாம் வகுப்பை மற்ற ஆசிரியர்கள் எடுக்க
தயங்கியதால் அதையும் நானே எடுத்தேன்.
முதலாம் வகுப்பில்
30 பேர்.எட்டாம் வகுப்பில் 30 பேர் என 60 பேர் எனது வகுப்பில். இதனால் பழு அதிகமானது.
இதனைக் குறைக்க "தத்து எடுத்தல்" என்ற புதிய முறையை நடைமுறைப் படுத்தினேன்.
அதாவது எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் முதலாம் வகுப்பு மாணவர் ஒருவரை தத்து எடுத்துக்
கொள்ள வேண்டும். அதாவது அவர் படிப்பதற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். இது
நல்ல பயனைத் தந்தது. பள்ளியைப் பார்வையிட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு.கதிரேசன்
அவர்கள் இதனை வெகுவாகப் பாராட்டினார்.
எக்கக்குடி பள்ளியில்
பணிபுரிந்த போது வட்டார அளவிலான நடுநிலைப் பள்ளி தமிழ் பாடத்திற்கு கருத்தாளர் நான்
தான். பல மூத்த ஆசிரியர்கள் தட்டிக் கொடுத்து என்னை வளர்த்தனர்
ஏழாம் வகுப்பு
மாணவர்களைக் கொண்டு நான் செய்த அறிவியல் பாடத்திற்கான "அறிவியல் பெயர்களை நினைவில்
வைப்பது எப்படி?" என்ற செயலாராய்ச்சி வட்டார அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு
மஞ்சூர் மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தால் பாராட்டப் பட்டேன். வட்டார அளவில் நடுநிலைப்
பள்ளி ஆசிரியர்களுக்கிடையே நடைபெற்ற கற்பித்தல் பொருள் தயாரித்தலில் தமிழ் பாடத்தில்
முதலிடம் பெற்றேன்.
இதை எல்லாவற்றையும்
விட இப்பள்ளிதில் சாதித்ததாக நான் கருதுவது எக்கக்குடியில் பெண் குழந்தை பெரியவளானால்
படிப்பைத் தொடர விடுவதில்லை. இது சம்பந்தமாக தலைமையாசிரியர் துணையுடன் ஒரு பெண்ணின்
பெற்றோருடன் பேசி பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்ததே. இப்படிதாக எக்கக்குடி ஊ.ஒ.நடுநிலைப்
பள்ளியில் 5.7.2006 வரை என் பணி தொடர்ந்தது.
6.7.2006 ல் கடலாடி
ஒன்றியம் கூராங்கோட்டை பள்ளியில் என்னால் முடிந்த வரை சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.
பல எளிய யுக்திகளை பயன்படுத்தி கற்பித்து வருகிறேன். தலைமையாசிரியை திருமதி.பா.வைரமணி
அவர்கள் எனது முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு
அளித்து வருகிறார்.
மாணவர்களை ஆங்கிலப்
பள்ளி மாணவர்களைப் போல் அறிவில் கொண்டு வந்தாலும் தோற்றத்திலும் மாற்ற வேண்டி உள்ளது.
அதற்காக கடந்த மூன்று வருடங்களாக மாணவர்களுக்கு பனியன் துணியால் ஆன பேண்ட் சர்ட் வழங்கி
வருகிறேன். பெல்ட்டும் எனது செலவில் வழங்கி வருகிறேன்.
கிராமப்புற மாணவர்கள்
பள்ளி முடிந்து வீடு போனால் படிப்பதில்லை. இதனைப் போக்க பட்டதாரி பெண் ஒருவரை எனது
செலவில் மாலை தனிப்பயிற்சி அளிக்கிறார். 5-6.30 மணி வரை வகுப்பெடுக்கும் அவர் மாதம்
ரூ.600 மட்டுமே வாங்கினாலும் அப்பணியை ஒரு தவமாகவே செய்து வருகிறார்.
திபாவளி, கிறிஸ்துமஸ்,
பொங்கல் என மதம் சார்ந்த பண்டிகைகளையும் மற்ற விழாக்களையும் தலைமையாசிரியையின் அனுமதியோடு
கொண்டாடி வருகிறேன்.
கல்வி சார்ந்து
எனது பணிகள்...
* நான் தொடக்கக்
கல்வி பயின்ற TNTDTA தொடக்கப் பள்ளியில் பயின்றவர்களில்
பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் இரு இடங்களைப் பிடிப்பவருக்கு தலா
2000 மற்றும் 1000 என வருடந்தோறும் ரூ.6000 வழங்கி வருகிறேன்.
* நான் நடுநிலைக்
கல்வி பயின்ற புனித பீற்றர் நடுநிலைப் பள்ளியில் பழைய மாணவர் மன்றத் தலைவராக செயல்
பட்டு என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.
* வருடம் இரண்டு
கஷ்டப்பட்ட மாணவர்கள் கல்லூரிக் கல்வி பயில
கல்விக் கட்டணம் செலுத்தி வருகிறேன்.
* பேடு என்ற தொண்டு
நிறுவனத்தின் எங்கள் பகுதி கமிட்டி தலைவராக பதவியேற்று ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்
தொகை பெற்றுத் தருகிறேன்.
பெற்ற விருதுகள்...
* மதுரை தினமலர்
20.10.2014 அன்று வழஙகிய "லட்சிய ஆசிரியர் 2014" விருது.
*சென்னை எழில்
இலக்கியப் பேரவை வழங்கிய "குறள் உரைச் செம்மல்" விருதை முனைவர் க.ப.அறவாணன்
அவர்கள் கரங்களால் 25.10.2014 அன்று பெற்றேன்.
*காரைக்குடி வள்ளுவர்
பேரவை நடத்திய மாநில அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றதற்காக
"குறள் ஆர்வலர்" விருதை தவத்திரு.குன்றக்குடி அடிகளார் கரங்களால் பெற்றேன்.
*வாசுதேவநல்லூர்
சிகரம் அறக்கட்டளை வழங்கிய "தமிழகத்தின் டாப் 9 மனிதர்" விருது பெற்றேன்.
* முகநூலை பயனுள்ள
முறையில் பயன்படுத்தியதற்காக காஞ்சி முத்தமிழ் சங்கம் வழங்கிய "முகநுல் வேந்தர்"
விருதை பேராசிரியர் கு.ஞான சம்மந்தன் அவர்கள் கரங்களால் 26.7.2015 அன்று பெற்றேன்.
* 5.9.2015 அன்று
சென்னை கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுலனவனம் வழங்கிய "ஆசிரியர் செம்மல்"
விருது பெற்றேன்
* 10.1.2016 அனறு
வேம்பார் காமராஜர் சமுக நலப் பேரவை வழங்கிய "சாதனை நாயகன்" விருதும் தங்கப்
பதக்கமும் பெற்றேன்.
* 26.1 2016 அன்று
கோவை தமிழ் இலக்கியப் பாசறை வழங்கிய "கவித் தூதர்" விருதை கலாமின் அறிவியல்
ஆலோசகர் விஞ்ஞானி திரு.பொன்ராஜ் அவர்கள் கரங்களால் பெற்றேன்.
* இத்தனை விருதுகளைக்
காட்டிலும் நான் பெருமையாக கருதுவது நான் பணிபுரியும் கூராங்கோட்டை கிராமப் பொதுமக்கள்
9.3.2015 அன்று மிகப் பிரமாண்டமாக நடத்திய பாராட்டு விழாவையும் அப்போது வழங்கிய நினைவுப்
பரிசையும் தான்.
எழுத்துப்பணி....
1991ல் தொடங்கிய
எழுத்துப்பணி இன்று வரை சிறப்பாக தொடர்ந்து வருகிறது. கதை ன, கவிதை, கட்டுரை, பேட்டி,
துணுக்கு, சிரிப்பு, விமர்சனம் என எண்ணிக்கு 2400ஐத் தாண்டும்.
அண்மைக் காலமாக
சிறுவர் பாடல்கள் அதிக அளவில் எழுதி வருகிறேன்.
பொழுது போக்கு...
* நாணயம், தபால்
தலை, புத்தகம் சன, பழைய பொருட்கள் சேமிப்பு..
*தமிழ் நாளிதழ்கள்
சேமிப்பு. இது வரை தமிழ் நாடு, வெளி மாநிலம், வெளி நாடு என 60 தமிழ் நாளிதழ்கள் சேகரித்துள்ளேன்.
* 21 10.2012ல்
நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட நிறைவு நாளில் நடைபெற்ற புரதானப்
பொருட்கள் கண்காட்சியில் என்னிடம் உள்ள ஒரே மரத்தாலான சங்கிலியைக் காட்சிப் படுத்தி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.ஆஷிஸ் குமார் அவர்களிடம் நினைவுப் பரிசு பெற்றேன்.
தொலைக்காட்சி வானொலி
நிகழ்ச்சி...
* பொதிகை தொலைக்காட்சியின்
காரசாரம் நிகழ்ச்சியில் இருமுறை.
* கலைஞர் தொலைக்காட்சியின்
நெஞ்சு பொறுக்குதில்லையே... நிகழ்ச்சயில் ஒரு முறை.
* நெல்லை வானொலியில்
வினாடி வினா.
*தூத்துக்குடி
வானொலியில் குழுவாக ஒரு முறை.
26.1.2016 அன்று
"இந்திய குடியரசின் சிந்தனைகள்" என்ற தலைப்பில் 13 நிமிட தனிப் பேச்சு....
இதுவே அடியேனின்
எளிய சாதனை...
தலைமையாசிரியர்
பணி மூப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ளேன். ஜூன் மாதம் பதவி உயர்வு. அப்போதும் சிறப்பாய்
செயல்பட வேண்டும். அதற்கு உங்களின் அன்பும் ஆலோசனையும் என்றும் தேவை .
நன்றி நட்புக்களே.
உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
எனது முகநூல் பக்கம்
:
Christhu
Gnana Valluvan
முடிந்தால் பார்வையிடுங்கள்.
No comments:
Post a Comment