Friday, 8 January 2016

திரு.நீதிதாஸ்

அணைவருக்கும் வணக்கம்,நான்
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம்,மைலங்குப்பம் ஊ.ஒ.து.பள்ளி, இ.நி.ஆசிரியர் தே.நீதிதாஸ்.
2008 ம் ஆண்டு பணிக்கு வந்தேன் ஈராசிரியர் பள்ளி முதல் மூன்று மாதங்களில்
பாடம் நடத்தி சோர்வடைந்தேன் என்னுடைய கற்பிக்கும் முறை அவர்களுக்கு புரியவில்லை என்பதும் அவர்களுக்கு கற்பிக்க என்னை நான் அவர்களுக்கென தயார்செய்ய வேண்மடுமெனவும் முடிவெடுத்தேன்.
என்னுடைய வகுப்பை எப்பொழுதும் உயிரோட்டமாக வைத்திருக்க அவர்களுடன் இணைந்திருந்தேன்.
💥ஆரம்பப்பள்ளி ஒரு மலர்தோட்டம்எனில் அதில் மாணவர்கள் மலரினும் மென்மையானவர்கள்...முதல்வகுப்பிற்கு... பேச,பாட,உற்றுநோக்க,சிந்திக்க, குழுவுடன் செயல்பட,கற்பனை செய்ய....முதலில் கற்றுத்தந்தேன் அனைத்தும் நேரடி அனுபவம் பின்னரே வரைய,படிக்க ,எழுத(வரிவடிவத்துடன்), அவர்களை தயார்படுத்தினேன், எவ்வாறு கூறினால் அவர்களுக்கு புரியும் ,என்பதை கண்டறிய நாட்களாயிற்று,பாடப்பொருளை கூடியவரையில் நேரடி அனுபவமாக அளித்தேன்...இது வெற்றி தந்தது.
வயல்கள்,தோட்டம், ,குளம்,குட்டை போன்ற நீர்நிலைகள், தபால்நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம்..ஊராட்சி மன்றம்,நியாய விலைக்கடை ஆகிய பொதுஇடங்களுக்கு களப்பயணம் சென்றோம்.
💥 கடினமான பாடப்பகுதிகளுக்கு கணினியை பயன்படுத்தி கற்பிக்கிறேன் இஃது மாணவர்களுக்கு விருப்பமான ஒன்று குழந்தைகளின் கண்ணையும் ,கருத்தையும் கவரும் விதத்தில் உள்ளது.
குருமூர்த்தி ஆசிரியர் அவர்களின் குறுந்தகடுகளை உபயோகிக்கிறேன், நன்றி குருமூர்த்தி சார், தற்போது photostory ,PPT .மற்றும் பதிவிறக்கம் செய்த காணொலி காட்சிகள் மூலமாக பாடங்கள் நடத்தப்படுகிறது, சகோதரி சாலை கலாவள்ளியின் குரலில் பாடல்கள் ஒலிக்கிறது.
💥 💥முதல் வகுப்பு மாணவர்களுக்கு மெழித்திறனை வளர்க்க கேட்டல்,பேசுதல்,வாசித்தல், போன்றவற்றை, கதை கூறியும்,கதை அவர்களை கூறக்கேட்டும் வளர்ந்த மாணவர்களின் திறன், எழுதுதலில் குறைகள் கண்டது அதனைக்களைய நான் மேற்கொண்டசெயல் முதல்வகுப்பிலே வரிவடிவத்தை கற்பித்தேன்...உதாரணமாக "அ" என்னும் எழுத்தை எழுத சுழியில் தொடங்கி கீழ்பிறை கோட்டுடன் படுக்கைகீற்று இட்டு இறங்குகீற்றுடன் முடிக்கவேண்டும் என்று கற்பிப்பது அவர்களுக்கு மேலும் சில வார்தைகளை அறிவதுடன் வரிவடிவத்தை அறிகின்றனர் .
சுழி
கீழ்ப்பிறை
படுக்கைகீற்று
மேல்படுக்கைகீற்று
இறங்குகீற்று
ஏறுகீற்று
சாய்க்கீற்று
சிறுவளைக்கீற்று
உள்வளைக்கீற்று
கொம்பு
கொம்புக்கால்
விலங்கு
மேல்விலங்கு போன்ற முக்கிய வரிவடிவங்களை கற்பிப்பது பயனளிக்கும்
..இதனை முதல்வகுப்பில் நான் செயல் படுத்தி வெற்றி கண்டிருக்கிறேன்.(புலவர்.கனகலட்சுமியின் "கசடற கற்க கற்பிக்க" என்ற நூலில்
இருந்து பின்பற்றிய முறைகள்)
💥உணவு இடைவேளை நேரங்களில் மாணவர்களுக்கு சதுரங்கம் விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்
சதுரங்கம் விளையாடுவது மாணவர்களின் தன்நம்பிகையை வளர்பதுடன் கற்கும் சிந்தனையையும் தூண்டுகிறது ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்கின்றனர்.
இதற்கு முத்தாய்ப்பாக பாரதியார் தின சதுரங்க போட்டியில் என் பள்ளி 5ம் வகுப்பு மாணவி க.திரிஷா ஒன்றியத்தில் முதலிடமும்,மாவட்டத்தில் மூன்றாமிடமும் ,மண்டல அளவில் 4 ம் இடத்தையும் பெற்றார்.
💥மெதுவாய் கற்கும் மாணவர்களை இரு குழுவாய் பிரித்து, கரும்பலகையை வலதுபக்க மூலையில் மேக்ஸ் கார்னர் என்றும் மற்றொரு மூலையை இங்கிலீஸ் கார்னர் என்று பிரித்து இருதினங்களுக்கொருமுறை சிறிய கணக்குகள் ஐந்து ,எளிய ஆங்கில வார்த்தைகளை ஐந்து அவர்களுக்கென எழுதி பயிற்சி அளிக்கப்படுகிறது மறுநாள் கணித குழு, ஆங்கில குழுவிற்கும் ஆங்கில குழு கணித குழுவிற்கும் அவர்களே கற்பிக்கின்றனர் இம்முறை எனக்கு நல்ல முன்னேற்றத்தை தந்துள்ளது.
💥உணவுத்திருவிழா என்ற பாடத்திற்கு முன்தயாரிப்பாக ஒவ்வொரு மாணவரையும் அழைத்து பாரம்பரிய உணவுவகைகளை அவர்களே வீட்டில் தயாரித்து வர பொற்றோரிடமும் அனுமதி பெற்று...ஒவ்வொருவரும் ஒரு உணவு வகையை தயாரித்து வருமாறு கூறினேன் அனைவரும் ஒரு, ஒரு வகைகளை கொணர்ந்தனர் ...
சோள தோசை
சோளஉப்புமா
களி
கோழ்வரகு கூழ்
கீரை அடை
புட்டு
அறுகம்புல் சாறு
கேழ்வரகு கஞ்சி
பால்பாயாசம்
கோழ்வரகு அடை
பொட்டுக்கடலை உருண்டை
இன்னும் பல... காலை உணவாக அதையே பள்ளியில் உண்டனர் .
💥என்னுடைய கற்பித்தல் முறையில் முழுவதுமாக பாடப்பொருளை செய்துகற்றல், நேரடிகற்றல், செயல்திட்டங்கள் மூலம் கற்பிக்கிறேன்.
செயல்திட்டமாக ஆண்டுதோறும் மழைக்காலங்களில் அணைத்து பெற்றோர்களும் தங்களுடைய தோட்டங்களில்(பள்ளியில் இடவசதி இல்லை ) குழி எடுத்து வேலி அமைத்த பின்னரே மாணவர்களுக்கு இரு மரக்கன்றுகள் வழங்கபடுகிறது...அவற்றை மாணவர்கள் வளர்க்கவேண்டும், இதை கண்காணிப்பு செய்ய மாணவர் குழு ஒன்று உள்ளது,இறுதியாக கலாம் அய்யா,அவர்களின் பிறந்த தினத்திற்கு மரக்கன்றுகளை வழங்கினேன்.
💥 கற்றல் கற்பித்தல், கருவிகள் தேவைக்கேற்ப உருவாக்கப்படுகிறது,
குறிப்பாக ஆங்கிலத்தில் வரியொற்றிய எழுத இரண்டு A4 அளவுள்ள சார்ட் பேப்பரில் எழுத்துக்களை எழுதி அதன்மேல் சொல்லோடேப் ஒட்டிவிட்டேன் இதில் அணைத்து மாணவர்களும் மார்கரால் எழுதி, அழித்து ஒவ்வொருவராக பயன்படுத்தினர்.
💥 பலவிதமான TLM களை நானே உருவாக்குகிறேன்... கடந்த ஆண்டு 4000 ரூபாய் செலவில் மார்கர் போர்டை என் பிறந்த்தினத்திற்கு, மாணவர்களுக்கு பரிசளித்தேன்.
💥 மாணவர்கள் அணைவரும் களப்பயணம்,சுற்றுலா செல்ல பள்ளியில் ஓரு உண்டியல் வைத்து அணைவரும் பணம் சேமித்து வருகின்றனர்.அவர்களின் தொகையை தாங்களாகவே குறித்து வைக்கின்றனர்.
💥 பொதுவாக எங்கள் பகுதி பொற்றோர்கள் ஆண்பிள்ளைகளை மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளை எங்கள் பள்ளியிலும் சேர்ப்பது வழக்கம் கடந்த இரண்டாண்டுகளாக தங்கள் பெண்பிள்ளைகளின் படிப்பைக்கண்டு பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளையும் இடையில் எங்கள்(4,5 வகுப்புகளில்) பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இவ்வாறு மெட்ரிகுலேசன் பள்ளியில் இருந்து எங்கள் பள்ளிக்கு வந்துசேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 7.
💥மூன்றாம் வகுப்பிற்கு 3ம் பருவத்திற்கான ஐவகைநிலங்கள்,பாடத்தி்ற்க்கு நிஜ மாதிரிகளை் போல...மாணவர்களை கொண்டே தத்ரூபமாக உருவாக்கி அதன் மூலம் கற்பித்தேன் அப்படி பயின்ற மாணவர்கள் பாடப்பொருளை மறக்காமல் இன்றளவும் உள்ளனர்.
💥உடல் உறுப்புகளை பற்றிய பாடத்திற்கு,ஓணான் மற்றும் தவளையை dissection செய்து காண்பித்து உடல் உறுப்புகளின் இயக்கத்தை விளக்கினேன்.
💥ஐந்தாம் வகுப்பு மாணவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினர்களாக்கி..."விஞ்ஞான சிறகு" இதழை படிக்க ஆர்வமூட்டுகிறேன்.சுட்டி விகடன்,கோகுலம்,துளிர் போன்ற இதழ்களை வாங்கிதந்து அவர்களை வாசிக்க தூண்டுகிறேன்.
💥 எனது நண்பர்களின் பிறந்த்தினத்தன்று அவர்களிடம் 1000ரூபாய் பணம் பெற்று எங்கள் வட்டாரத்தில் உள்ள மனவளர்ச்சிகுன்றிய குழந்தைகளுக்கான Day care centre ல் மதிய உணவு,பழங்களை அளித்து வருகிறேன்.
💥 தேசத்தலைவர்களின் பிறந்ததினத்தில் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் அல்லது திரைப்படத்தை உணவுஇடைவேளையில் திரையிட தவறுவதில்லை.
: மேற்கண்ட அணைத்து செயல்பாடுகளும் ஒவ்வொருஆண்டும் சிறு மாற்றங்களுடன் எம்பள்ளியில் நடைபெறுகிறது.

1 comment: