Friday, 8 January 2016

திருமதி.தென்றல்

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
அனைவருக்கும் வணக்கம்.                                         
நான், பா.தென்றல்,D.T.Ed.,M.A.,B.Ed.,M.Phil.,
இடைநிலை ஆசிரியை,  
                  இணைப்பு -1                                                                                                                                          
ஸ்ரீ கார்த்திகேயன் உதவி பெறும் தொடக்கப் பள்ளி, 
காரைக்குடி. 630001
சிவகங்கை மாவட்டம்.
எங்கள் பள்ளி, திண்ணைப்பள்ளியாகப் பிறந்து, தொடக்கப் பள்ளியாக வளர்ந்து நிற்கிறது. 100 வயதையும் கடந்து விட்டது. 
1991
ல்  என் பணியேற்பு;
Teach to reach
என்பதை சில ஆண்டுகளில் புரிந்து கொண்டேன். செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள். சமீபத்தில் மேற்கொண்டவை பற்றி மட்டும் பகிர்கின்றேன்.
6.1.2010 அன்று 147 என்ற பதிவு எப்படி இன்று 375 மாணவர்கள் ஆனது? இன்றைய தலைமை ஆசிரியை முனைவர். ஜீ.சுவேதாவின் பெரு முயற்சிகளுடன் எனது சிறு பங்களிப்பும் காரணம். அவற்றுள் சில :
1.வருகை நேரம்:
  காலை 8.40 மணி முதல் 9.20 வரை ஆயத்த வகுப்பு நடைபெறுகிறது.அனைத்து ஆசிரியர்களும் ஆஜர். மாணவர்களனைவரும் முழுமையான சீருடையில் பள்ளிக்கு வருகின்றனர்.
2.காலை வழிபாட்டுக்கூட்டம்:  

Prayer song, Pledge இரண்டும் ஆங்கிலத்திலும் சொல்வர் மாணவர்கள். ஆசிரியர் உரை ஆங்கிலத்தில் மட்டுமே பகர்வேன், மாணவர்களின் கேட்டல் திறனை வளர்ப்பதற்காக.
3.ஆங்கிலத்தில் நலம் நாடுதல்:
.  காலை வணக்கம் கூறியதும் அப்படியே அன்றைய காலை உணவு, நிகழ்ச்சிகள் பற்றி சிறு உரையாடல் ஆங்கிலத்தில் நடக்கும். மாணவர்களும் ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளப் பயிற்சியும் உண்டு.
            விடியோ இணைப்பு-1,2
4.கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுகள் :
வகுப்பறைக்குள் நுழைந்ததும் கண் மூடி அமர்ந்து, கணபதி ஸ்லோகம், அயக்ரீவர் ஸ்லோகம், சரஸ்வதி ஸ்லோகம், குரு ஸ்லோகம் ஆகிய  நான்கு ஸ்லோகங்கள் சொல்வோம். தினமொரு கவிஞரின் பாடல் ஒன்று பாடுவோம். பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் மற்றும் முடியரசனார் பாடல்களில் ஒன்று. 
வெள்ளிக்கிழமை இந்து,கிறிஸ்தவ, இசுலாமிய தெய்வ பக்திப்பாடல்கள் பாடுவோம்.
5.தகவல் பலகை :
 தகவல் பலகையில் அன்றைய செய்தித்தாளில் வெட்டி எடுத்த படம் ஒட்டி, கலந்துரையாடுவோம். தினம் ஒரு மாணவர் செய்தித் தாளில் சிறு பகுதி மட்டும் வாசிப்பர். கல்விச்செய்திகள் மட்டுமன்றி, பரவலாகப் படிப்போம்.
6.எல்லோரும் கொண்டாடுவோம்
பள்ளியில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்காகவும், குழந்தைகள் கற்றல் செயல்களில் மகிழ்ச்சியாக ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் விழாக்கள் கொண்டாடி, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்கிறோம். பரிசில்களும் உண்டு என்பதால் குழந்தைகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
                          இணைப்பு -2 (4 படங்கள் )                                                                                                                                         
7. "நாளும் வரைவோம் இந்தியா ":
 தினம் ஒரு மாணவர் என ஒரு கரும்பலகையில் இந்திய வரைபடம் வரைந்தும், மற்றொன்றில் ஒரு வாய்பாடும் எழுதி இருப்பர். அதைத் திருத்துதல்.மூன்றாம் பருவம் முதல் தமிழ்நாடு எல்லைக்கோடு படம் வரைகின்றனர்.
8. வருகைப் பதிவு நேரம் :
அப்பொழுது 'பள்ளிக்கண்ணாடி' வந்து விடும். ’என்னால்தான் தாமதம் என்ற குற்றச்சாட்டு எப்போதும் உலவுகிறது. உடனே மாணவர் வருகைப் பதிவேடு எடுப்பேன். என் செல்வங்கள் அழகாக ஆங்கிலத்தில் 6 முழு வார்த்தைகள் கூறி, present சொல்வார்கள். ஜூன் முதல், மாதம் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிப் பயிற்சி கொடுப்பேன்.
           விடியோ இணைப்பு-3
        
9.இன்றைய வார்த்தை :
  வகுப்பில் அடிக்கடி பேசும் வார்த்தையை மொழிபெயர்த்து Sentence for the day உருவாக்கி,  அதைக் கரும்பலகையில் எழுதி வைப்பேன்.அன்று முழுவதும் பயன்படுத்துவோம். மாலையில் Oral home work கொடுத்து, மறுநாள் சரிபார்ப்பேன்.
10.தினம் தினம் திருக்குறள் :
வகுப்பு தொடங்கும் முன் தினமும் ஐந்து குறள் ஒப்பிக்கும் திட்டத்தில் மூன்று மாணவிகள் வெற்றி பெற்று, காரைக்குடிSMSV ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. சேவு முத்துகுமார் அவர்களிடமும், என்னிடமும் பரிசு பெற்றுள்ளனர். ஸ்ரீஹரிணி, பிரகதாம்பாள், கோகிலவேணி ஆகிய மூவரும் இன்று வரை 36 அதிகாரங்கள் படித்துள்ளனர். 360 திருக்குறளையும் எப்பொழுது கேட்டாலும் சொல்வர்
               இணைப்பு - 3 (2 படங்கள் )                                                                                                                                   
11. கேள்வி நேரம்
 பாடத்திற்கு இடையே, "நீ கேளு நான் சொல்றேன் " பயிற்சி நடக்கும். தருமி போல் மாணவர்கள் கேள்வி கேட்க ஆசிரியர் பதில் சொல்லியே ஆகணும். வரையறைக்கு உட்பட்ட தலைப்புகள் கொடுப்பேன்; அவ்வப்பொழுது நெறிப்படுத்துவேன்.
12. பேசும் சுவர்கள்:
வகுப்பறை சுவர்களில் சார்ட் பொட்டலங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அவற்றில் மனக்கணக்கு, பொதுஅறிவு, குறள் படிப்போம், கணக்குக்கதம்பம், பைந்தமிழ்ப் பயிற்றகம், வினாடி வினா, உள்விளையாட்டு, proverbs, translate, no fear no tear போன்ற செயல்பாடுகளுக்காகத் தயார் செய்த அட்டைகள் இருக்கும். தேவையான போது பயன்படுத்திக் கொள்வோம்.
                       இணைப்பு - 4 (2 படங்கள் )                                                                                                                                         
13.மாணவர் விருப்பப்படி பாடம்:
மாணவர்களுக்கு ஐந்து தெரிவுகள் உண்டு. பாடல், கதை, நாடகம், பொம்மலாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு என. அவர்கள் கருத்தின்படியே பாடம் நடக்கும். சமயத்தில் சுடச்சுட ஸ்கிரிப்ட் தயார் செய்தும் நடத்துவேன்.
14. அலமாரி நிறைய TLM and SLM
துணைக்கருவியும், முன் தயாரிப்பும் இன்றிக்  கற்றல் கற்பித்தல் சிறக்காது என்பது என் எண்ணம்.  எனவே அனைத்துப் பாடங்களுக்கும் ஒரு அட்டையாவது தயார் செய்யும் பழக்கம் உண்டு.
                     இணைப்பு - 5 (2 படங்கள் )                                                                                                                                         
15. நண்பகலில் மன அமைதி :
யோகாசனம், பிராணாயாமம், தியானம்  ஆகியவற்றை முதலில்
முறைப்படி குருவிடம் நான் கற்று, பிறகுதான் கற்பிக்கத் தொடங்கினேன். எளிய உடற்பயிற்சிகளும் செய்வோம்.
                   இணைப்பு - 6 (1 படம் )                                                                                                                                         
16.மதியஉணவுநேரம்:
 மாணவர்கள் தரையில்  சிறுதுண்டு விரித்து, ஸ்பூன் வைத்து சாப்பிடுவர்.
அசைவ உணவு கூடாது. நடுவில் அமர்ந்து நானும் அவர்களுடனே.
17.அறிவுக்கருவூலம்: 
சொந்தமாகப் புத்தகங்கள் வாங்கி, புத்தகப்பூங்கொத்து அறிமுகப்படுத்து முன்பே  அண்ணஞ்சார் நூலகம் வைத்து, நாங்கள் படித்து வருகிறோம். அக்பர் பீர்பால் முதல் அக்னி சிறகுகள், சத்திய சோதனை வரை உண்டு. பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள்,பட்டுக்கோட்டையார் பாடல்கள்,சுஜாதா மற்றும் உதயமூர்த்தி நூல்கள்,எனக்குரிய இடம் எங்கே, மலர் அல்ஜீப்ரா போன்ற சில நூல்கள் எனக்காக உண்டு. அறிக அறிவியல், துளிர், புன்னகை உலகம், புன்னகை கிட்ஸ்,சிறுவர் மலர், கோகுலம், சுட்டி விகடன், சுழல் போன்ற இதழ்களும் வாசிப்போம்.
18. மரபு சார் விளையாட்டுகள் ;
மாலையில் பல்லாங்குழி, தாயம், சதுரங்கம், பம்பரம், வளையல் சூட்டீஸ் போன்றவை விளையாடி மகிழ்கிறோம். மைதானத்தில் உடற்பயிற்சிகளும் செய்கிறோம்.
                 இணைப்பு - 7 (3 படங்கள் )                                                                                                                                         
19. பரதம் கற்றேன் ;
எந்த ஆசிரியரும் குழந்தைகளுக்குப் பரதநாட்டியம் கற்றுத்தர இயலாது என்பது புரிந்த போது நான் களமிறங்கினேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முனைவர். மா.சுப.சரளா அம்மாவின் மாணவியாகி, மூன்று வருடங்கள் மிகவும் சிரமப்பட்டு கற்று, இன்று மாணவிகளை ஆட்டுவிக்கிறேன்.
                  இணைப்பு - 8 (3 படங்கள் )                                                                                                                                         
20. பாடல்கள் எழுதுதல் ;
இந்தியச்சூழலுக்கும், பாடப் பொருளுக்கும் ஏற்ப ஏராளமான ஆயத்தப் பாடல்கள் எழுதி இருக்கிறேன். அவற்றையும் பாடுகிறோம். எடுத்துக்காட்டாக,
                          WELCOME RAIN( Rhyme)
                    Rain, rain come here ;
                    Come again and often here ;
                    Little Rani wants to drink ;
                    Rain , rain come here. 
 21. கர்நாடக சங்கீதம்:
பாட்டு சொல்லிக் கொடுப்பதில் பின்னடைவு ஏற்பட்ட போது , அழகப்பா பல்கலைக் கழகத்தில் வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்ந்தும், இசையாசிரியர் திரு.முத்துகுமார் அவர்களிடம் தனிப் பயிற்சி பெற்றும் இரண்டு வருடப் பட்டயப் படிப்பு முடித்து, இன்று குழந்தைகளுடன் ஆதி, ரூபகம், திஸ்ர ஏகம் போன்ற எளிய தாளங்கள் போட்டு, பாடல்கள் பாடுகிறோம்.  பாட்டுப்போட்டிகளில் பரிசும் வென்று வருகிறார்கள் எங்கள் மாணவர்கள்.
         இணைப்பு - 9 (3 படங்கள் )                                                                                                                                         
22..களம் கண்டு கற்றல் :
சாலையோர தாவரங்கள், இலைகள், பூக்கள் சேகரித்தல், நீர்நிலைகளைப் பார்வையிடல், ரேஷன் கடை, மரப்பட்டறையில் உற்றுநோக்கல் என்று புறப்பட்டு நேரடி அனுபவம் பெற்று வருகிறோம்.
          இணைப்பு - 10 (3 படங்கள் )                                                                                                                                         
23.ஆங்கிலத்தில் கூவும் தமிழ்க் குயில்கள் :
 பள்ளியில் அடிக்கடி நடக்கும் விழாக்களில் என் மாணவர்கள் ஆங்கிலத்தில் அதிகம் பேசுவர். பாரதியார், கட்டபொம்மன், ஔவையார் என  எந்த வேடம் தரித்தாலும்  அவர்களின் பேச்சு ஆங்கிலத்தில் தான்.
          வீடியோ இணைப்பு -  4 , 5
24.உளவியல் செயல்பாடுகள் :
 மற்ற வகுப்புகளில் ஆசிரியர்களால் சமாளிக்க முடியாத மாணவர்கள், அழுது கொண்டேயிருக்கும் குழந்தைகள், உடல் நலமில்லை என்று பொய் சொல்லும் சிறுவர்கள்,அதிக சேட்டை செய்யும் குழந்தைகள் ஆகியோர் என் வகுப்பில் சில காலம் இருந்து, மாற்றம் பெற்று, திரும்பிச் செல்கின்றனர்.
25.  பள்ளியில் கண்காட்சி ;
பொம்மை உலகம் பாடத்திற்காக, ”பொம்மைக் கண்காட்சி நடத்தினேன். பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தயார் செய்து கொண்டு வந்த அனைத்துப் பொருட்களும் அருமை.
                 இணைப்பு - 11 (3 படங்கள் )                                                                                                                                         
26. அறிவியல் செயல்பாடுகள்
சிலந்தி அட்டையின் அத்தனை செயல்பாடுகளும் மாணவர்களே செய்வர். இன்றும் அறிவியல் சோதனைகளை ஆர்வமுடன் செய்கிறார்கள்.
          இணைப்பு - 12 (6 படங்கள் )                                                                                                                                         
27. உள்ளே வெளியே :
 வகுப்பறைக்குள் செடியின் வளர்ச்சியை அளப்பதற்குச் செடி வளர்ப்போம். வெளியே உயிர்வேலியாக நித்ய கல்யாணி போன்ற செடிகள் வளர்க்கிறோம்.
          இணைப்பு - 13 (3 படங்கள் )                                                                                                                                         
28.சுவர்களற்ற வகுப்பறை
கோள்களின் இயக்கம், விண்வெளிப் பயணம், கிரகணங்கள், விசைகள், சாலைக்குறியீடுகள் போன்ற பல பாடங்கள் மைதானத்தில் நடக்கும். (பாதி நேரம் இப்படியே ஓட்டு என்று முன்னாள் தலைமை ஆசிரியர் கடிந்து கொண்ட போதும் தொடர்கிறது. )
          இணைப்பு - 14 (4 படங்கள் )                                                                                                                                         
29. Map drawing:
நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய நிலப்படங்கள் வாங்கிக் கொடுத்து, இந்திய எல்லைகள், அண்டை நாடுகள், அரசியல் அமைப்பு , இயற்கை அமைப்புகள் ஆகியவை வரையப் பயிற்சி அளிக்கிறேன்.ஆசையாக, அழகாகச் செய்கிறார்கள்.
         இணைப்பு - 15 (2 படங்கள் )                                                                                                                                         
30.சிறப்பு வகுப்புகள் :
 முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் எழுத்துகளை அடையாளம் காணுதலிலும், வாசித்தல் திறனிலும் அடைவு குறைவாக இருப்பதைக் கண்டறிந்து, அது எனது வகுப்பிலும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தலைமை ஆசிரியரிடம் கூறினேன். அதனால் சென்ற ஆண்டு  முதல் சனிக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
31. ஆண்டு விழாக் கொண்டாட்டம் :  
கடந்த ஐந்து வருடங்களாக ஆண்டு விழா நடத்தி வருகிறோம். நான் ஸ்கிரிப்ட் எழுதி அரங்கேற்றும் ஆங்கில நாடகம், வில்லுப் பாட்டு, பரத நாட்டியம் ஆகியவை  கட்டாயம் உண்டு. இரண்டு வருடங்களாக என் மாணவர்கள் நிகழ்ச்சி தொகுத்தளித்தலை, (compering) ஆங்கிலத்தில் வழங்கி அசத்துகிறார்கள்.
           இணைப்பு - 16 (4 படங்கள் )                                                                                                                                         
32. தகவல் தொழில் நுட்பப் பயன்பாடு :
 வாட்ஸ் அப் கதைகள், செய்திகளை வகுப்பில் வாசிப்போம்.
தேர்ந்தெடுத்த whats app படங்களைக் குறுந்தகட்டில் ஏற்றி, போட்டுக் காட்டுகிறேன். முகநூலில் எங்கள் பள்ளிக்கென்று தனியாக ஒரு பக்கம் தொடங்கி,பதிவுகள் இட்டுவருகிறேன். இப்பொழுது கணினி வழிக் கற்றலிலும் அடி எடுத்து வைத்து இருக்கிறோம்
         இணைப்பு-17(4படங்கள்)                                                                                                                                         .33.பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டங்கள்:
 வருடத்தில் ஒரு முறை பள்ளியின் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து, ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்துகிறோம், பல்கலைக் கழகம் மற்றும் DIET பேராசிரியர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வருகிறோம். அவர்களின் அனுபவப் பேச்சுகள் அனைவருக்கும் பாடங்களாகின்றன. பருவத்திற்கொரு முறை வகுப்புவாரிப் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
         இணைப்பு - 18 (2 படங்கள் )                                                                                                                                          
34.பள்ளி நேரம் தாண்டி
 எப்பொழுதும் என் வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், சில நேரங்களில் குறிப்பேடுகள் திருத்தம் செய்யவும், CCE மதிப்பீட்டிற்காகவும் , மதிப்பெண் பதியவும், கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்குச் சென்று வருகிறேன்.
35. சிகரம் தொட்ட ஆசிரியர் விருது :
 சிறந்த முறையில் ஆங்கிலம் கற்பித்தலுக்காக வட்டார வள மைய அளவிலும், ஒன்றிய அளவிலும் இரண்டு முறை விருது பெற்றிருக்கிறேன்.
                இணைப்பு - 19 (2 படங்கள் )                                                                                                                                         
36.KING LEAR மற்றும் பாரத மாதா
B.Ed.படிக்கும் போது, நான் கதை தேர்ந்தெடுத்து, ஸ்க்ரிப்ட் எழுதி, இயக்கி, KING LEAR ஆக நடித்து எங்கள் பேராசிரியர்கள் பலரிடம் பாராட்டுகள் பெற்றேன்.அவ்வப்பொழுது பள்ளியில் பாரதமாதா, கலாம், இந்திராகாந்தி போன்ற வேடங்களில் வலம் வந்து ,மாணவர்களுக்கு ஆர்வமூட்டுகிறேன்.
        இணைப்பு - 20 (3 படங்கள் )                                                                                                                                         
37. கருத்தாளர் பணி :
 மாநிலக் கருத்தாளராகவும், மாவட்டக் கருத்தாளராகவும் ABL,SALM,COMMUNICATIVE ENGLISH போன்ற பல பயிற்சிகள் பெற்று, சிறந்த முறையில் வகுப்புகள் எடுத்துப் பலமுறை பாராட்டுகள் பெற்றிருக்கிறேன். மாவட்டக் கருத்தாளராக ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும். ஆசிரியப்பயிற்றுநர்களுக்கும் வகுப்பு எடுத்த போது பெற்ற நட்பும் ஒத்துழைப்பும் மிகவும் இனியவை. சென்ற ஆண்டு ICT பயிற்சி பெற்று, கருத்தாளராகவும் பணியாற்றியதில் கணினி பற்றி, நிறையக் கற்று, கற்றதைப் பள்ளியில் பயன்படுத்தியும் வருகிறேன்.
         இணைப்பு - 21 (3 படங்கள் )                                                                                                                                           
38.பொம்மலாட்டப் பயிற்சி:
2015 ஆம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலத்தில் PUPPETRY IN EDUCATION பயிற்சி அளித்தார்கள். பொம்மலாட்டம் பற்றிய பல படிகளை அறிந்து கொண்டதோடு அல்லாமல், பல மாநிலங்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றியும் அறிந்து வியந்தோம்.
          இணைப்பு - 22 (4 படங்கள் )                                                                                                                                         
39. தொடக்கக் கல்வி முடித்ததும்:
ஆறாம் வகுப்பில் சேர, உள்ளூரிலமைந்துள்ள இரண்டு சிறந்த மேல்நிலைப் பள்ளிகளில் எங்கள்  பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களின் சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல மாணவர்கள் ஆங்கில வழியில் படிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
40.ஆசிரியர் எப்போதும் மாணவரே:
            இணைப்பு - 23 (4 படங்கள் )                                                                                                                                         
நான் அரசுப் பணியில் சேர்ந்த பிறகுதான் தொலைநிலைக்கல்வி வாயிலாக B.A., M.A., B.Ed., M.Phil ஆகிய பட்டங்கள் பெற்றேன். இதுவரை பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட அகில இந்திய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் தயாரித்து வழங்கி இருக்கிறேன் (Paper presentation). தற்பொழுது ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி (Ph.D.) செய்து வருகிறேன்.
            இணைப்பு - 24 (1 படம் )                                                                                                                                         
2014,டிசம்பரில் SCERT நடத்திய EFFECTIVE CLASSROOM PROCESSES AND PRACTICES TO ENABLE CHILDREN AS 21ST CENTURY CITIZENS என்ற கருவிலான  கருத்தரங்கில் முதன் முறையாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் Paper presentation செய்தது மிகவும் மகிழ்ச்சி.
       வீடியோ  இணைப்பு 6                                                                                                                          
                         
                 மனமுவந்து செய்யும் ஆசிரியப்பணி - அந்த
                 மகேசனுக்குச் செய்யும் அருட்திருப்பணி.
                                    நன்றி.



No comments:

Post a Comment