Friday, 8 January 2016

திரு.சிவராமன்



எனது பெயர் பெ.சிவராமன். மதுரை மாவட்டம், சிட்டம்பட்டி என்ற கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன்.
எங்கள் பள்ளி 77 வருட பழமையானது. இன்று எம் பள்ளியில் 9 முழு நேர ஆசிரியர்களும் இரு பகுதி நேர ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகிறோம்.
இப்பள்ளிக்கு கடந்த 2006, ஜூலை 13ஆம் தேதி மாறுதலாகிவந்தேன்.
1. எம் பள்ளி, சுற்றுச்சுவர் இல்லாமல் ஆனால் பரந்துபட்ட இடமாக இருந்தது.
தமிழகத்தில் கற்பிக்கப்பட்டு வரும் செயல் வழி கற்றில் உள்ள 'ஆரோக்கிய சக்கரத்தை' வெறும் ஏட்டளவில் இல்லாமல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளேன்.
ஆரோக்கிய சக்கரத்தின் 5 செயல்பாடுகளுக்கும் 5 குழுக்களை ஏற்படுத்தி ஒவ்வொரு குழுவிற்கும் 25 மாணவர்களைக் கொண்டு தினமும் நடைமுறைபடுத்திவருகிறேன்.
2 சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு முயற்சி எடுத்துள்ளேன். நான் இப்பள்ளிக்கு வந்த பொழுது வெறும் 9 மரங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ 36 வகையான 178 மரங்கள் பள்ளி வளாகத்தில் உள்ளது. அந்த ஒவ்வொரு மரங்களின் தமிழ், ஆங்கிலம் & அறிவியல் பெயர்களை பெயிண்ட்டால் எழுதிவைத்துள்ளேன்.
3. அதுமட்டும் அல்ல, பள்ளியில் 'பூந்தடம்' ( குழந்தைகளின் பூப்போன்ற பாதத்தின் தடம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி கிராமங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம்.
4. பிறந்த நாளில் குழந்தைகள் மரக்கன்றுகள் கொண்டு வந்து பள்ளியில் நட்டுவந்ததற்கு மாற்றாக அக்குழந்தைகளின் பிறந்தநாளுக்கு ஒரு மரக்கன்று கொடுத்து அவற்றை அவர்கள் வீட்டிலோ இல்லை அவர்கள் கிராமத்திலோ நடச்சொல்லி கிராமங்கள் தோறும் பசுமைப் போர்வையை விரித்து வருகிறோம்.
5. எம் பள்ளிக்கு பல கிராமங்களிலிருந்து மாணவர்கள் வருகிறார்கள். அச்சாலையெங்கும் மரங்களை நட்டு அவர்களைக்கொண்டே பராமரித்து வர ஏற்பாடு செய்துள்ளேன். நட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் மிகப்பெரிய வேலையாகும்.
அவற்றை எளிமையாக்க ' ஒரு மாணவன் ஒரு பாட்டில் ஒரு மரம்' என்ற ஒரு திட்டட்க்தை ஏற்படுத்தி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்று என ஒதுக்கி பள்ளிக்கு வரும் பொழுது வீட்டிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டு வீடு திரும்பும் பொழுது பள்ளியிலிருந்து தண்ணீர் எடுத்துச்சென்று அக்கன்றுகளுக்கு ஊற்றச் சொல்கிறேன்.
6. அடுத்து நட்டுவைத்த மரக்கன்றுகளை விசமிகள் கிழித்து ஒடைத்து விடுவர். அம்மரங்களை மருத்துவமனையில் மாவுகட்டு போடுவார்களே அதுபோல் மாணவர்களை கட்டுத்துணி கொண்டு கட்டி மண்ணை குழைத்து பூசச் சொன்னேன். அவ்வாறு செய்த மரங்கள் பிழைத்துக்கொள்கின்றன.
7. மாணவர்களை தங்கள் பகுதியில் கிடைக்கும் நாட்டு விதைகளை அதாவது வேம்பு, நாவல், புளி & பனை போன்ற விதைகளை சேகரித்து மழைகாலங்களில் மாணவர்களிடம் கொடுத்து ஈர இடங்களில் தூவச்சொல்கிறேன்.
8. கடந்தாண்டின் சுற்றுச்சூழல் தினத்தன்று கருவேல மரங்களை அழித்தல் போட்டி ஒன்று நடத்தினேன். அப்போட்டியின் 3 தினங்களில் எம்மாணவர்கள் 1,54,031 கருவேல மரக்கன்றுகளை ஆணி வேருடன் பிடுங்கி வந்தனர்.
9. சுற்றுச்சூழல் தினத்தன்று பல பள்ளிகளுக்கு மாணவர்களுடன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் உரையாற்றி வருகிறேன்.
10. கோவை, சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று 3 நாட்கள் பறவைகள் பற்றி அறிந்து வந்தேன். அங்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானி, பறவைகள் விஞ்ஞானி , பிரமோத் ஆகியோரின் ஆலோசனைப்படி மதுரை மாவட்ட பள்ளிகள் பல சென்று பறவைகளின் அவசியம் பற்றியும் அவற்றை அழிவிலிருந்து காப்பது பற்றியும் எடுத்துக்கூறிவருகிறேன். எம் பள்ளியின் மேற்கூரையில் பறவைகளுக்கு சிறுதானியங்கள் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதால் பறவைகள் மீது மாணவர்களுக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது.
11. கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 'ஐசான்' என்ற வால்நட்சத்திரம் வந்தது. பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கருகில் வந்த வால்நட்சத்திரத்தைப்பற்றி மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல ஒவ்வொரு பள்ளியாக சென்று வந்தேன். மதுரை மாவட்டத்தில் ஏறத்தால 300 ஆசிரியர்களுக்கு ஐசான் பற்றி வகுப்பெடுத்தேன். மதுரை. திண்டுக்கல் & திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 27 பள்ளிகளிலும் அம்மூன்று மாவட்டங்களில் மக்கள் கூடும் 13 இடங்களிலும் அந்த ஐசான் வால்நட்சத்திரம் பற்றிய விளக்க உரை ஒளிபெருக்கி துணையுடன் எடுத்துக்கூறினேன். 2013, நவம்பர் 17 ஆம் தேதி என் பள்ளியின் எதிரேயுள்ள குன்றின் மீது தொலைநோக்கி துணையுடன் அந்த வால்நட்சத்திரம் நகர்ந்து சென்றதை எம் மாணவர்களுக்கும் மதுரை மாவட்டத்தை சார்ந்த சுமார் 500 பொதுமக்களுக்கும் சேர்த்து ஒரு வானியல் திருவிழா ஏற்ப்பாடு செய்து தெளிவாக விளக்கிக்கூறினேன். மாவட்டத்திலேயே நாங்கள் மட்டுமே நடத்தினோம்.
13. பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட மேசை மேல் கணினி & மடிக்கணினிகளைக் மாணவர்களுக்கு கணினி பயிற்சி கொடுத்த பயனால் எம் மாணவர்கள் நன்கு கணினி திறன் பெற்றுள்ளனர்.
14. கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் மதுரை மாவட்டம் எழுமலைக்கு மாணவர்களை அழைத்துச்சென்று மலை அறிவியல் பற்றியும் சாமநத்தம் கண்மாய்க்கு அழைத்துச்சென்று பறவை அறிவியலும் கற்றுக்கொடுத்தேன்.
15. பள்ளியில் வருடம் தோறும் சுற்றுச்சூழல் தினங்கள் 16ம் கொண்டாடி வருகிறோம்.
16. மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் மலை, வெள்ளரிப்பட்டி மலை, அரிட்டாப்பட்டி மலை, மற்றும் குட்லாடம்பட்டி மலை போன்றவற்றிற்கு மாணவர்களை அழைத்துச் மலைப்பகுதிகளை சுத்தம் செய்தும் மலையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துச்சொல்லப்படுகிறது.
17. பள்ளியில் உலக காடுகள் தினம், சிட்டுக்குருவிகள் தினம், தண்ணீர் தினம் & ஓசோன் தினம் கொண்டாடப்படுகிறது.
18. மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை, தேவதாஸ் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று இரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே & ஸ்கேன் போன்றவைகளின் செயல்பாடுகளை அறிந்து வந்தோம்.
19. வருடம் தோறும் மதுரை மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் மருத்துவ கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்துச்சென்று வருவேன்.
20. அதுபோல் புத்தகத்திருவிழாவிற்கும் அழைத்துச்சென்று புத்தகங்கள் வாங்கச்சொல்வேன்.
21. நிலம், நீர் & காற்று மாசுபடுவதை அறிந்துகொள்ள டிவிஎஸ் சக்ரா டயர் தொழிற்சாலைக்கு அழைத்துச்சென்று மாணவர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தேன்.
22. இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையிலிருந்து பெறப்பட்ட 377 புகைப்படங்களைக் கொண்டு ஒரு புகைப்பட கண்காட்சி நடத்திக்காட்டினேன்.
23. 2012, செப். 25ஆம் தேதி ஓசோன் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 108 சதுர மீட்டரில் பல வண்ணங்களைக் கொண்ட ரங்கோலி வரைந்தோம்.
24. இவ்வாண்டு ஆக. 28ஆம் நாள் பள்ளியின் வாசலில் அத்தப்பூக்கோலம் போட்டு ஓணம் கொண்டாடப்பட்டது.
25. SSA - INTEL விருதுக்கான போட்டியில் மாசுக்கட்டுப்பாடு என்ற செயல்திட்டத்திற்கு மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், 2011ல் சுத்தம் சுகாதாரம் என்ற செயல்திட்டத்திற்கு மாநில அளவில் முதலிடமும் கிடைத்தது.
26. எம் பள்ளி மாணவனை இன்பெயர் விருத்திற்கு ஊக்கப்படுத்தி தேசியப் போட்டிக்கு புது தில்லி அழைத்து சென்று வந்தேன்.
28. சுற்றுச்சூழலில் சிறந்த 10 பள்ளிகளில் ஒன்றாக எம் பள்ளியும் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ விடமிருந்து விருது பெற்றோம்.
29. கடைகளுக்கு சென்று பாலித்தீன் தீமை பற்றி எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
30. சாலையோர மரங்களில் உள்ள விளம்பர பலகைகளை நீக்கிவருகிறோம்.
31. தேசிய நெடுஞ்சாலையின் சுரங்கப்பாதையில் குவி ஆடி வைத்து யார் உதவியும் இன்றி கடக்க உதவி செய்தோம். அதற்கு டிஎப்சி விருது கிடைத்தது.
32. தேசிய நெடுஞ்சாலையோரம் பிளாஸ்டில் பாட்டில் கொண்டு இடைவெளிகளை அடைத்தோம். அதற்கும் டிஎப்சி விருது கிடைத்தது.
33.
ஒவ்வொரு குடும்பத்திலுள்ள உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஒவ்வொரு மரம் என 'ஆளுக்கொரு மரம் வள்ர்ப்போம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
34. இப்படி மதுரை மாவட்ட அளவில் சுமார் 6500க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து வருகிறோம்.
35. பள்ளியில் உள்ள குடிநீர் குழாய் 32 ஆண்டுகளாக சிங்க் இல்லாமல் இருந்தது.
அதை பயன்படுத்தும் மாணவர்களின் சீருடை நனைந்தும் தண்ணீரும் வீணாகி வந்தது. இதை மாணவர்களின் துணையுடன் ரூ 6800 சொந்த செலவில் கட்டினேன்.
36. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாசா புளுட்டோவை அருகிலும் நிலவின் மறுபக்கத்தையும் படம் பிடித்து காட்டியது. இதைக் கண்ட எம் மாணவர்கள் நாமும் வானில் உள்ளவற்றை காண முடியாதா எனக்கேட்டவுடன் ரூ 20000 த்திற்கு சொந்தமாய் ஒரு தொலைநோக்கி வாங்கியுள்ளோம். அதன் மூலம் வானியல் நிகழ்வுகளை கண்டு வருகிறோம்.
37. நாங்கள் இன்ஸ்பெயர் விருது வாங்கியதை ஒரு குறும்படமாக எடுத்து சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையம் கால் மணி நேரம் ஒளிபரப்பியது.
38. எங்கள் பசுமை செயல்பாடுகள் பற்றி தி இந்து தமிழ் நாளிதழ் மாநிலம் முழுமைக்கும் செய்திகளை வெளியிட்டிருந்தது.
39. புதிய தலைமுறை மாத இதழ் ஆசிரிய தின சிறப்பிதழில் சிறந்த 8 ஆசிரியர்களில் என்னைப்பற்றியும் செய்தி வெளியிட்டது..
40. புதிய தலைமுறை தொலைக்காட்சி என்னைப்பற்றி செய்தி வெளியிட்டது.
41. நீயூஸ் 7 சேனல் எம் மாணவனின் பேட்டியை ஒளிபரப்பியது.
42. 2014ல் தினமலர் நாளிதழ் இலட்சிய ஆசிரியர் விருது கொடுத்து என்னை கெளரவப்படுத்தியது.
43. மதுரை கிரீன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எனக்கு பசுமை ஆர்வலர் விருது கொடுத்தது.
44. மதுரை மாவட்ட வன சரகம் என்னை பிரண்ட் ஆப் பாரஸ்ட் என தேர்ந்தெடுத்துள்ளது.
45. வருடத்திற்கு 5 பசுமை சார்ந்த நிகழ்ச்சிகளை எம் மாணவர்கள் அகில இந்திய வானொலியில் நிகழ்த்துவார்கள்.
இன்னும் இன்றும் தொடர்கிறது.
நன்றி...!

No comments:

Post a Comment